search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு வருகை"

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு நாள் சுற்றுப் பயணமாக நாளை ஈரோடு வருகிறார். கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
    ஈரோடு:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு நாள் சுற்றுப் பயணமாக நாளை (புதன்கிழமை) ஈரோடு வருகிறார்.

    சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நாளை காலை 6.30 மணிக்கு ஈரோடு வரும் கவர்னர் காளிங்கராயன் இல்ல விருந்தினர் மாளிகை செல்கிறார். முன்னதாக அவரை கலெக்டர் பிரபாகர், எஸ்.பி. சக்தி கணேசன் வரவேற்கிறார்கள்.

    பிறகு அங்கிருந்து காலை 9 மணிக்கு கார் மூலம் கோபி புறப்பட்டு செல்கிறார்.

    கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    பிறகு அங்கிருந்து மீண்டும் ஈரோடு வரும் கவர்னர் பன்வாரிலால் மீண்டும் காளிங்கராயன் இல்ல விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    அங்கு கவர்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் வாங்குகிறார்.

    மாலை 4.30 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையம் வருகிறார். அங்கு துப்புரவு பணியில் கவர்னர் ஈடுபடுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோட்டிலிருந்து கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு செல்கிறார்.

    வழக்கம் போல் கவர்னர் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியையும் பொது இடத்தில் துப்புரவு பணியை செய்யும் நிகழ்ச்சிக்கும் தி.மு.க. உள்பட எதிர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தி வந்தனர்.

    ஆனால் நாளை ஈரோட்டில் கவர்னருக்கு எதிராக தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் எந்த போராட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் தி.மு.க. பொதுக்குழு நடப்பதையொட்டி ஈரோடு மாவட்ட தி.மு.க. பிரமுகர்கள் அணி தலைவர்கள் அனைவரும் சென்னைக்கு சென்று விட்டனர்.

    இதனால் தி.மு.க. தரப்பிலும் எந்த போராட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    ×